புத்தாண்டு பிறப்பு கட்டுரை

Tamil Puthandu Katturai In Tamil

இந்த பதிவில் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான புத்தாண்டு பிறப்பு கட்டுரை பதிவை காணலாம்.

தமிழர் பண்பாடுகளும் கலாச்சாரங்களும் தமிழர்களின் பண்டிகைகள் மூலமாகவே அதிகம் வெளிக்காட்டப்படுகின்றது.

  • புத்தாண்டு பிறப்பு
  • Tamil Puthandu Katturai In Tamil
தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

புத்தாண்டு பிறப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. புத்தாண்டு வரலாற்று நோக்கு
  3. புத்தாண்டின் பாரம்பரியங்கள்
  4. புத்தாண்டும் புதிய முயற்சிகளும்
  5. முடிவுரை

முன்னுரை

உலகளவில் தமக்கே உரித்தான கலாச்சாரங்களையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டவர்கள் தமிழர்கள். தமிழர்களுக்குரிய சிறப்பான பண்டிகைகளில் புத்தாண்டும் ஒன்றாகும்.

வாழ்வின் அனைத்து காலங்களிலும் மன மகிழ்வையும் ஆழ்ந்த அறிவியலையும் உடையதாய் அமைவது தமிழர்களின் பண்டிகைகள் ஆகும்.

அந்த வகையில் புத்தாண்டு பிறப்பதனால் வாழ்வில் புதுமைகளும் மகிழ்ச்சியும் பிறக்கும் என்பது தமிழர்களின் நம்பிக்கையாக உள்ளது.

காலநிலை மாறுதல்கள் மற்றும் பருவகால மாறுதல்கள் என பல அர்த்தப்பாடுகளை உடையதாக புத்தாண்டு பிறப்பு அமைகின்றது.

இக்கட்டுரையில் புத்தாண்டு எவ்வாறு உருவானது அதன் பாரம்பரியங்கள் அதன் அர்த்தப்பாடுகள் போன்றவற்றை இக்கட்டுரை நோக்குகிறது.

புத்தாண்டு வரலாற்று நோக்கு

உலகளவில் வானியலில் தொன்று தொட்டு சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் ஆவார்கள்.

ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன அவற்றில் முதலாவது ராசி மேடராசி ஆகும். மேடத்தில் சூரியன் சஞ்சரிக்கும் முதல் நாளே புத்தாண்டு பிறக்கின்றது என்று அன்றே கணித்து புதுவருடத்தை கொண்டாடுகிறார்கள்.

சித்திரை மாதம் என்பது இளவேனில் காலத்தினுடைய ஆரம்பமாகும். இக்காலமே மகிழ்ச்சியான நிகழ்வுகள் பண்டிகைகள் போன்றனவற்றின் ஆரம்பமாக அமைகிறது.

இதனால் தான் தமிழர்கள் சித்திரை முதலாம் திகதியை புதுவருடமாக கொண்டாடுகின்றனர்.

புத்தாண்டின் பாரம்பரியங்கள்

தமிழ் புத்தாண்டு பல சடங்கு சம்பிரதாயங்களை கொண்டதாக உள்ளது.

புதுவருடத்தன்று அதிகாலையில் எழுந்து மருத்துநீர் வைத்து நீராடுவார்கள், புத்தாடை அணிந்து ஆலயங்களுக்கு செல்வார்கள்,

இனிப்பான உணவு பண்டங்களை தயாரித்து உறவினர்களுக்கும் கொடுத்து உண்பார்கள் இது ஒற்றுமை பண்பை வெளிப்படுத்துவதாகும்.

சுப நேரத்தில் நல்ல காரியங்களை துவங்குதல், புது தொழில்களை ஆரம்பித்தல், கைவிசேடம் பெறுதல், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லுதல்,

பொங்கல் இடுதல், பாரம்பரிய இசை இசைத்தல், விளையாடுதல் இது போன்ற நிகழ்வுகளுடன் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்பார்கள்.

புத்தாண்டும் புதிய முயற்சிகளும்

புத்தாண்டு பிறந்த முதல் நாளில் நல்ல தொழில்களை ஆற்றினால் அது மேன்மை அடையும் என்பது இந்துக்களின் நம்பிக்கை ஆகும்.

கல்வி கற்பவர்கள் ஆகட்டும் புதிய தொழிலை ஆரம்பிப்பவர்கள் ஆகட்டும் விவசாயிகள் ஆகட்டும் இந்த தினத்தில் புதிய முயற்சிகளை ஆரம்பிப்பார்கள்.

பழைய ஆண்டில் நிகழ்ந்த துன்பங்கள் தோல்விகள் என்பவற்றை மறந்து பிறக்கவிருக்கும் புதுவருடத்தில் அனைத்தும் மாறும் எனும் நம்பிக்கையோடு புதிய பல முயற்சிகளில் ஈடுபடுவது நம்மவர்களின் வழக்கமாகும்.

எத்தனை கோடி பிரச்சனைகள் வாழ்வில் வருகின்ற போதும் மீண்டும் மீண்டும் நம்பிக்கையோடு முயல வேண்டும் என புத்தாண்டுகள் உணர்த்துகின்றன.

முடிவுரை

நீண்டகாலங்களாக பின்பற்றப்பட்டுவரும் தமிழர்களுடைய பண்பாடுகளும் கலாச்சாரங்களும் அவற்றோடிணைந்த பண்டிகைகளும் சிறப்பு மிக்கவை.

மிகச்சிறந்த தமிழர்களின் வாழ்வியலோடு இவை பிண்ணி பிணைந்து போயுள்ளன. இவற்றில் பல ஆழமான அர்த்தப்பாடுகள் உள்ளன. இவை எமது வாழ்வியலில் மிகவும் ஆழமாக பின்பற்றப்பட வேண்டியவை.

ஒவ்வொரு ஆண்டு பிறக்கும் போது பல மாறுதல்கள் எமது பூமியில் மாறாது தொடர்ந்த வண்ணமே உள்ளது. இவற்றிற்கேற்றால் போல் எம் விழுமியங்களை பின்பற்றி மகிழ்வாக வாழ்வோம்.

You May Also Like :

திருவள்ளுவர் பற்றிய கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை