பாரதிதாசன் கட்டுரை தமிழ்

Bharathidasan Katturai In Tamil

இந்த பதிவில் என்னை கவர்ந்த கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கட்டுரை தமிழ் பதிவை காணலாம்.

தமிழ் தழைக்கவும், தமிழர் பெருமை நிலைக்கவும், தமிழ்நாடு செழிக்கவும் பாடல்கள் பாடிய இருபதாம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்தவர் பாவேந்தர் பாரதிதாசன்.

  • பாரதிதாசன் கட்டுரை
  • Bharathidasan Katturai In Tamil
பாரதியார் தமிழ் பற்று கட்டுரை

பாரதிதாசன் கட்டுரை தமிழ்

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பிறப்பும் வாழ்க்கைவரலாறும்
  3. தமிழ்ப்பணி
  4. படைப்புக்கள்
  5. முடிவுரை

முன்னுரை

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞர். தமிழ் மீது பற்றுக்கொண்டு தமிழ் வளர்த்த மாமனிதர் “பாவேந்தர்” என்று சிறப்பிக்கப்படும் புரட்சிக்கவி பாரதிதாசனுடைய வாழ்க்கை தமிழுக்கானது என்றால் அது மிகையல்ல.

இவர் மகாகவி பாரதியார் மீது அன்பு கொண்டு அவரது தமிழ்பற்று மற்றும் தேசப்பற்று என்பன கண்டு வியந்து பாரதிக்கு அடியவன் என்று தன் பெயரை “பாரதிதாசன்” என்று மாற்றி கொண்டவர்.

மிகச்சிறந்த எழுத்தாளன் படைப்பாளி என தனக்கென தனி இடத்தை அமைத்து கொண்டார். இவரது வரிகள் என்றும் அழியாத பல ஆழமான உணர்வுகளை தமிழர்கள் மனதில் தந்திருக்கிறது. பிற்பட்ட காலத்தில் தமிழ் வளர இவரது உழைப்பு நீண்டு நெடுத்திருக்கிறது.

இவரின் வாழ்கை வரலாறு தமிழ்ப்பணி மற்றும் படைப்புக்கள் தொடர்பாக இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும் வாழ்க்கை வரலாறும்

இவர் புதுச்சேரியில் ஏப்ரல் 29 ம் திகதி 1891 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.

“திருப்பொழிச்சாமி” என்பவரிடம் ஆரம்ப கல்வியினை பயின்றார். மகாவித்துவான் பெரியசாமி புலவர் என்பாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்று தேர்ந்தார்.

ஒரு திருமணவிழாவில் இவர் பாடிய பாரதியாரின் பாடல் அங்குவந்திருந்த பாரதியாருக்கு இவரை அடையாளம் காட்டியது. இதன் மூலம் பாரதியாரின் அன்பை பெற்று அவர் வழியில் தமிழார்வம் கொண்டவரானார்.

1909 இல் தமிழ் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். 37 ஆண்டுகளாக தமிழ் கற்பித்து வந்தார்.

அக்காலத்தில் இந்தியாவில் சுதந்திர போராட்டம் வலுப்பெற்ற காலத்தில் அடிமைப்பட்டு கிடந்த பாரத தேசத்தை “பாரதியார், வ வே சு ஐயர், அரவிந்தர்” முதலான விடுதலை போராளிகளால் இவரும் ஈர்க்கப்பட்டார்.

இவ்வாறு வாழ்வனைத்தும் தன்னை தமிழுக்கும் சமூக மறுமலர்ச்சிக்காகவும் ஈடுபடுத்தி கொண்டார்.

தமிழ்ப்பணி

தமிழுக்கு அமுதென்று பெயர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று தமிழ்பற்றை உலகிற்கு பறைசாற்றுகின்றார்.

சிறு வயது முதலே தமிழ் ஆர்வமுடைய இவர் தமிழ் மொழி மீது கொண்ட காதலால் இவரது கவி வரிகள் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத தேன்சுவை சொட்டும் அழகிய கவிதைகளை தந்ததால் இவரை பாவேந்தர் என்று அழைக்கின்றனர்.

தமிழர்களின் வீரத்தை பாடுகையில்

தூங்கும் புலியை பறைகொண்டெழுப்பினோம்
தூய தமிழரை தமிழ் கொண்டெழுப்பினோம்
தீங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்
செந்தமிழ் உணர்ச்சி வேல்கொண்டு தாக்குவோம்

என்று தமிழர்கள் மனதில் தமிழ் வீரத்தை அவர்கட்கு புரியவைத்தார்.

தமிழர்களை தன் தமிழ் கொண்டு எழுப்பினார் இவர். சமூகத்தில் நிகழும் சீர்கேடுகளை திருத்த மக்களை விழித்தெழ செய்ய தன் தமிழ் கொண்டு இவர் பல படைப்புக்களை தந்திருக்கிறார்.

சமூகத்தில் காணப்பட்ட சாதிய வேற்றுமைகள், முட்டாள்தனங்களை வேரோடு சாய்த்து தன் புரட்சிகர எழுத்துக்களால் மக்களை ஒன்றுபடுத்தியவர்.

இவர் தமிழ் ஆசிரியர், கவிஞர், எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், அரசியல்வாதி என பல வடிவங்களில் இவர் தமிழ்ப்பணி ஆற்றினார்.

படைப்புக்கள்

கழியிடை ஏறிய சுளையும் -முற்றல்
குழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் – காய்ச்சுப்
பாகிகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும் – தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும் – தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!!

என்று பாடுகையில் தமிழ்பற்று இல்லாதவருக்கும் தமிழ்பற்று உருவாகும் வகையில் இவரது படைப்புகள் அமைந்திருந்தன.

அடிமைப்பட்டு கிடந்த அடிநிலை மக்களின் வாழ்வில் எழுச்சி உண்டாக்கும் பாணியில் இவரது கவிதைகள் அமைந்திருந்தன.

தமிழியக்கம், குடும்பவிளக்கு, இருண்டவீடு, கண்ணகி புரட்சி காப்பியம், பாண்டியன் பரிசு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, மணிமேகலை வெண்பா, தமிழிச்சியின் கத்தி, வீரத்தாய் சிறுகாப்பியம்

என தமிழில் பல நூல்களையும் சிறுகதை, நாவல், கவிதை என பல படைப்புக்களை தந்துள்ளார்.

திரைப்படத்துறையிலும் இயக்குனர், பாடலாசிரியர் என பல ரூபங்களில் இவரது படைப்புக்கள் காலத்தை வென்றனவாய் இருக்கின்றன.

முடிவுரை

இன்றைக்கு தமிழும் நம் கலாச்சாரமும் ஓரளவேனும் தலைநிமிர்ந்து நிற்கின்றதென்றால் பாரதிதாசன் போன்ற ஒப்பற்ற எழுத்தாளர்களுடைய தமிழ்ப்பற்றும் தமிழ்ப்பணியும் என்றால் அது மிகையல்ல.

இன்றைய சமுதாயத்தில் எழுத்தாக்கம், வாசிப்பு திறன் என்பன மிகவும் குறைந்து போயுள்ளன. இதுவே எமது சமுதாயத்தின் விழுமிய குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கின்றது.

தமிழையும் தாய்மொழியையும் என்றைக்கும் ஆழமாய் நேசிக்க வேண்டும் என்று உணர்த்தி சென்ற இவரின் தடம் என்றைக்கும் எம் மனதில் ஆழமாய் பதிந்திருக்கும்.

You May Also Like :

தமிழர் பண்பாடும் கலாச்சாரமும் கட்டுரை

தமிழ் மொழியின் தொன்மையும் சிறப்பும் கட்டுரை