நான் ஒரு குடை கட்டுரை

Naan Oru Kudai Tamil Katturai

இந்த பதிவில் “நான் ஒரு குடை கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு(02) கட்டுரைகளை காணலாம். இவை ஒவ்வொன்றும் 150 சொற்களை கொண்டு அமைந்துள்ளன.

மழைக்காலங்களிலும் கோடை காலங்களிலும் குடையின் பயன்பாடு இருந்து கொண்டே இருக்கும். குடையானது வெயில், மழை என இரண்டிலும் இருந்து எம்மை பாதுகாக்கின்றது.

நான் ஒரு குடை கட்டுரை – 1

மழை நாட்களில் அனைவரும் மறந்து விடாமல் எடுத்து செல்லும் முக்கியமானவன் பொருள் நானாவேன். ஆம் நான் ஒரு குடையாவேன். அந்த அழகான மழைக்காலம் சொல்லும் கதைகளில் எனக்கென்று பல கதைகள் உள்ளன.

மாணவர்கள் மழையிலே வெள்ளை சீருடையும் பொக்கிசமான புத்தகங்களும் நனையாமல் பள்ளி சென்று வீடு திரும்ப என்னை தவிர வேறுயாரால் உதவ முடியும். பாடசாலை முடிந்ததும் ஓட்டமும் நடையுமாக மழையையும் வெள்ளத்தையும் ரசித்த படியே வீதிகளில் குடைகளின் பேரணியை நீங்கள் பார்க்கலாம்.

அது ஒரு அழகிய கனாக்காலம் என்னை மறந்து விட்டு வீடு சென்று அம்மாக்களிடம் ஏச்சு வாங்கும் குறும்பு சிறுவர்கள் ஏராளம். இவ்வாறு ஒரு மழைக்காலத்தின் அழகியலை குடை இன்றி இங்கே நினைத்து பார்க்க முடியாது.

சந்தைக்கும் வேலைகளுக்கும் என்னை கொண்டு மிதிவண்டிகளில் ஓடி போகும் அப்பாக்கள் என்னை எப்போதும் தம்மோடு பத்திரப்படுத்தி கொள்வார்கள். காற்றோ புயலோ வெள்ளமோ எம்மை என்ன செய்து விடும் என்று எதையும் பொருட்படுத்தாது முன்னேறி செல்லும் மனித மனங்களுக்கு நான் நண்பனாய் இருக்கின்றேன்.

வீட்டிற்குள் அடைந்து கிடந்து மழை என்னும் இயற்கை அழகியலை காணதவர்கள் துர்பாக்கியசாலிகள் தான்.

அந்த காலம் துவங்கி இந்த காலம் வரையும் எவ்வளவோ மனிதர்கள் வளர்ச்சி கண்டுள்ளார்கள் தொழில்நுட்பங்கள் வளர்ச்சி கண்டு விட்டன இருந்தாலும் எனக்கான இடம் மாறவே இல்லை.

பருவ மழை ஆரம்பித்து விட்டால் போதும் எங்கோ மூலைகளில் தூசுபடிந்து கிடக்கும் என்னை தூசுதட்டி எடுத்து கொள்வார்கள் கடைகளிலும் என்னை வாங்க கூட்டம் அதிகமாய் இருக்கும் இவ்வாறு மனிதர்கள் வாழ்வியலில் நான் ஒரு அழகான அங்கம் என்றால் மிகையல்ல.

நான் ஒரு குடை கட்டுரை – 2

அன்றொரு நாள் ஒரு மழைக்காலத்தின் ஆரம்பம் ஒரு ஆசிரியர் தனது மகளுக்காக பிறந்தநாள் பரிசாக என்னை ஒரு கடைத்தெருவில் வாங்கி கொண்டார்.

அந்த நீல நிறக்குடையை கொடுங்க அதுவே தனது மகளுக்கு பிடிக்கும் என்று ஒரு அப்பாவாக அகமகிழ்ந்து கொண்டார். அதனை தன் மகளிடம் கொடுத்து மழையிலும் வெய்யிலிலும் தன் மகளை பாதுகாக்கும் பொறுப்பை எனக்கு கொடுத்தார்.

அந்த பெண்குழந்தையின் ஆனந்தத்தை வார்த்தைகளால் எவ்வாறு கூறமுடியும். எப்போது மழைவரும் என்று காத்து கிடந்தவள் மழை வந்ததும் பூரித்து போனாள் என்னை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக பாடசாலை நோக்கி நடக்க துவங்கியவளுக்கு அது ஒரு கனவு பயணம் போல ஆனந்தமாய் இருந்தது.

அவளது மகிழ்வு கண்டு எனக்கும் ஆனந்தமாய் இருந்தது. அவள் நண்பிகள் “புது குடையா? அழகாய் இருக்கே” என்று கூறும்போதெல்லாம் அவள் கள்ளம் கபடங்கள் இல்லாது முகத்தில் புன்னகை பூத்து மறைவதை நான் பார்த்து மகிழ்ந்தேன்.

இவ்வாறு பல நாட்கள் கழிந்தன. என்னை எடுத்து கொண்டு பாடசாலை சென்று அவள் திரும்புகையில் என்னை ஏதோ ஓர் மறதியில் தவறி விட்டு விட்டு சென்று விட்டாள். அன்று தான் நான் அவளை கடைசியாக பார்த்த தினம் என்று நினைக்கும் போது இன்றும் வேதனையாக உள்ளது.

என்னை தொலைத்து விட்ட கவலையில் அந்த சிறுமியும் வருந்துவாள் என்று எனக்கும் தெரியும் அவள் வந்து என்னை மீட்டு செல்வாள் என்று நானும் காத்து கொண்டிருந்தேன்.

ஆனால் என்னை யாரோ ஒரு பழைய அறையில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்னை யாரும் கண்டுகொள்வதாயில்லை தூசுபடிந்த ஒரு அறையின் மூலையில் இன்று அனாதரவாக கிடக்கின்றேன். என்றேனும் ஒரு நாள் அவள் என்னை எடுத்து செல்வாள் என்று நம்பி காத்து கொண்டிருக்கின்றேன்.

You May Also Like:

எனது பொழுதுபோக்கு கட்டுரை

பெற்றோரை மதிப்போம்