எனது பொழுதுபோக்கு கட்டுரை

Enathu Poluthu Pokku Katturai In Tamil

இந்த பதிவில் “எனது பொழுதுபோக்கு கட்டுரை” என்ற தலைப்பில் 150 சொற்களுடன் இரண்டு(02) கட்டுரை பதிவுகளை காணலாம்.

எனது பொழுதுபோக்கு கட்டுரை – 1

எமது வாழ்வில் கிடைக்கின்ற ஓய்வு நேரங்களை நாம் பயனுள்ளதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் அதுவே ஒரு நல்ல மனிதனுக்கு அழகு. நான் எனது பொழுதுபோக்காக நல்ல புத்தகங்களை வாசிப்பதை வைத்திருக்கின்றேன்.

எனக்கு நல்ல புத்தகங்களை வாசிப்பதில் அதிக ஆர்வம் இருக்கின்றது. ஓய்வு நேரங்களில் அருகில் உள்ள நூலகங்களுக்கு சென்று அங்கே காணப்படுகின்ற சிறந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், அறிவியல் சார்ந்த புத்தகங்களை வாசிப்பேன்.

இது எனக்கு பல நல்ல அனுபவங்களை பெற்று தருகின்றது. நிறைய புதிய விடயங்களை என்னால் அறிந்து கொள்ள முடிவதுடன் சிறந்த ஆக்கங்களை எழுதவும் இது எனக்கு உதவியாக இருந்திருக்கின்றது.

நூலகங்களில் கிடைக்கின்ற அமைதி ஆத்மாரத்தமானது. அது மனதை ஒருநிலைப்படுத்துவதோடு நல்ல அறிவையும் எனக்கு பெற்று தருகின்றது. நூலகத்தில் இருந்து பல புத்தகங்களை வீட்டுக்கு கொண்டு சென்று ஓய்வு நேரங்களில் வாசிப்பது எனது வழக்கமாகும்.

சிறந்த புத்தகங்களை தேடுவது ஒரு சிறந்த உணர்வை எனக்கு தரும் இதுவே எனக்கு வாழ்வின் தேடலை உணர்த்தியிருக்கின்றது. அவ்வாறே நான் வாசித்த நல்ல புத்தகங்களை பற்றி எனது நண்பர்களோடு பகிர்வது ஒரு சிறந்த அனுபவமாகும்.

இவ்வாறான கலந்துரையாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை இது எனக்கு பல நண்பர்களை உருவாக்கி தந்திருக்கின்றது. எந்த இடங்களுக்கு சென்றாலும் நல்ல புத்தகங்களை தேடி சென்று வாங்குவது எனக்கு பிடித்தமான ஒன்றாகும்.

என்னுடைய நண்பர்களும் எனக்கு நல்ல புத்தகங்களை பரிசளிப்பார்கள். நான் புத்தகங்களை போலவே பத்திரிகைகளையும் அதிகம் வாசிப்பேன் அங்குள்ள நல்ல ஆக்கங்களை வாசிக்கின்ற போது சிறந்த எழுத்தாளர்களுடன் பழகியது போன்ற ஓர் உணர்வு எனக்கு கிடைக்கும். எனவே எனது பொழுதுபோக்கு எனக்கு மிகவும் பயனுள்ளதாய் உள்ளது.

எனது பொழுதுபோக்கு கட்டுரை – 2

எனது பொழுதுபோக்காக நான் வீட்டு தோட்டம் செய்வதை வைத்திருக்கின்றேன். இது ஒரு சிறந்த பொழுதுபோக்காகும். ஓய்வு நேரங்களில் மனதுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சிறிதளவான வருமானத்தை ஈட்டி தருவதாகவும் அமைந்திருக்கின்றது.

நான் மாலை பொழுதுகளில் எனது வீட்டை அண்டிய சிறிய நிலத்தில் வீட்டு தோட்டம் செய்து வருகின்றேன். அங்கு காய்கறி பயிர்களான கத்தரி, வெண்டி, தக்காளி, பயிற்றை, மிளாகாய், பூசணி, கீரை போன்றனவற்றையும்

கிழங்கு பயிர்களான மரவள்ளி, வற்றாளை, கரணை, இராசவள்ளி போன்றவற்றையும் பயிரிடுவேன் அத்தோடு சோளம், பயறு போன்ற தானிய பயிர்களையும் சிறிய அளவில் செய்து வருகின்றேன்.

இவற்றினை நட்டு அவற்றுக்கு நீர் பாய்ச்சி இயற்கை பசளைகளான தாவர கழிவுகள் கூட்டெரு என்பனவற்றை பயன்படுத்தி நான் எனது வீட்டு தோட்டத்தை மேற்கொண்டு வருகின்றேன்.

இதனால் எனக்கு இரசாயனங்கள் இல்லாத சிறந்த மரக்கறிகள், பழங்கள் என்பன கிடைக்கின்றன. அவற்றிடையே அதனை அழகாக்க பூச்செடிகளையும் நட்டு வளர்க்கின்றேன். இவை பூச்சி விரட்டிகளாகவும் தொழிற்படுகின்றன.

இந்த வீட்டுதோட்டத்தில் வேலை செய்வது சிறந்த மனநிறைவை தருகின்றது. இதனை வேறு எங்கும் என்னால் பெற்றுவிட முடியாது.

எங்களுக்கு வீட்டுக்கு தேவையான மரக்கறிகள் எனது வீட்டு தோட்டத்தில் இருந்து கிடைப்பதனால் அது ஆரோக்கியம் நிறைந்ததாகும். அதே சமயம் மரக்கறி வாங்க சந்தைக்கு செல்ல வேண்டிய நேரமும் செலவும் குறைவாகும்.

அத்துடன் சில அறுவடைகளை விற்பதனால் சிறியளவு இலாபமும் எனக்கு கிடைக்கின்றது. இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியாக நான் வீட்டு தோட்டம் செய்வதனை எனது பொழுதுபோக்காக கருதுகின்றேன்.

விவசாயம் செய்வதனை போல மனநிறைவு வேறு எந்த தொழிலிலும் கிடைப்பதில்லை ஆகவே நீங்களும் உங்கள் பொழுதுபோக்காக வீட்டுதோட்டம் செய்து பயன்பெறுங்கள்.

You May Also Like:

எனது பாடசாலை அழகானது கட்டுரை

நான் ஒரு கதைப்புத்தகம் கட்டுரை