சுத்தம் சுகம் தரும் சிறுவர் கட்டுரை

Sutham Sugam Tharum Katturai In Tamil

இந்த பதிவில் “சுத்தம் சுகம் தரும் சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு கட்டுரைகளை காணலாம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். அந்த வகையில் சுத்தம் நமக்கு சுகத்தையும் நோயற்ற வாழ்வையும் தருகின்றது.

சுத்தம் சுகம் தரும் சிறுவர் கட்டுரை – 1

சுத்தம் சுகம் தரும் எச்சில் இறக்க வைக்கும். என்ற சான்றோர் வார்த்தை தற்காலத்தில் மனிதர்களால் மறக்கப்பட்டும் மறுக்கப்பட்டும் வருகின்றது.

இதன் விளைவாக பாரிய பாதகமான விளைவுகளை கொள்ளை நோய்களின் வடிவில் மனித குலம் எதிர் நோக்கி வருகின்றது. இன்று அவற்றை நிதர்சனமாக காணமுடிகின்றது.

செயலுக்கேற்ற விளைவினை தப்பாமல் கிடைக்கச் செய்கின்றது இறை நியதி. நாம் எம்மையும் நாம் பயன்படுத்தும் பொருட்களையும் நாம் வாழும் சூழலையும் சுற்றாடலையும் சுத்தமாக வைத்திருப்பதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.

நோய்நொடிகள் நம்மை அணுகாமல் நாம் நலமாக வாழலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும். அந்த வகையில் சுத்தம் நமக்கு சுகத்தையும் நோயற்ற வாழ்வையும் தருகின்றது.

தூய காற்று, தூய உணவு, தூய குடிநீர், தூய இருப்பிடம், தூய சுற்றாடல் என்பவற்றுடன் எமது உடலையும் நாம் அணிகின்ற உடைகளையும் பயன்படுத்துகின்ற பொருட்களையும் தூய்மையாக வைத்திருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சியடன் கூடிய ஆரோக்கியமான நல்வாழ்வை வாழ முடிகின்றது.

உணவு, உறக்கம், ஓய்வு, உறையுள் என்பவற்றில் அளவு, முறை பேணி வாழ்ந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம். நாம் இவற்றை அலட்சியம் செய்வதால் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றோம்.

உடல் வருத்தம், மன வருத்தம் இரண்டுமே நோய்களாகும். ஒன்றில் ஏற்படுகின்ற நோய் மற்றதையும் தாக்குகின்றது. ஆகவே இவ்விரண்டினதும் ஆரோக்கியத்தினையும் சமமாக பேண வேண்டியது அவசியமாகும்.

எனவே நம்மிலும் நம் சுற்றுச் சூழலிலும் சுத்தத்தினை பேணி அதனுடாக கிடைக்கும் சுகத்தினை அனுபவிப்போம்.

சுத்தம் சுகம் தரும் சிறுவர் கட்டுரை – 2

கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக்குடி, சுத்தம் சோறு போடும் என்பதெல்லாம் நம் நாட்டில் வழங்கும் சுத்தம் தொடர்பான பழமொழிகளாகும். இவை நாம் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவதாக உள்ளன.

வீடும் நாடும் எமது இரு கண்களாகும். எனவே வீட்டையும் சுற்றுப்புற சூழலின் தூய்மையையும் தவறாது பேண வேண்டும். பொது இடங்களில் குப்பை போடுவது, அசுத்தம் செய்வது, எச்சில் துப்புவது முதலானவற்றை தவிர்க்க வேண்டும்.

இன்று சுகாதாரக்கேடு என்பது பெரிதும் சவாலான ஒன்றாக உள்ளது. தற்காலத்தில் தொழிற்சாலைகள் பெருகிவிட்டன. இவற்றால் ஏற்படுத்தப்படும் புகைக்கழிவுகள் பெரும் பாதிப்பை மனிதருக்கு ஏற்படுத்துகின்றன.

தொழிற்சாலை கழிவு குடி நீருடன் கலப்பதனால் இதை பருகும் போது உயிரிழப்பு முதற் கொண்டு பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றது. போக்குவரத்து பெருக்கத்தால் நச்சுப்புகை காற்றுடன் கலக்கின்றது.

இதனால் சுவாசிக்கும் காற்று அசுத்தமாகிவிடுகின்றது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்படுவதுடன் அமைதியான வாழ்க்கையையும் பாதிப்படைய செய்கின்றது. இதைப் போலவே இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளும் கூட சுற்றுப்புற சூழலை மாசடையச் செய்கின்றன.

இன்று பல நோய்கள் மனித குலத்தை வாட்டிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் கொரோனா முதலிடம் வகிக்கின்றது. இவ்வாறான நோய்களிலிருந்து நம் சமுதாயத்தை பாதுகாத்துக்கொள்ள நம்மையும் நம்மை சூழ உள்ள இடங்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகின்றது.

நாம் அனைவரும் எப்போதும் சுத்தமாக இருந்தால் தான் சுகமான மற்றும் ஆரோக்கியமான வாழ்வை வாழ முடியும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாகும்.

You May Also Like :
வீட்டுத்தோட்டத்தின் பயன்கள் கட்டுரை
இயற்கை வர்ணனை கட்டுரை