இயற்கை வர்ணனை கட்டுரை

Iyarkai Varnanai Katturai In Tamil

இந்த பதிவில் “இயற்கை வர்ணனை கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.

இயற்கையினுள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள் காணப்படுவதோடு அவை ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளையும் அழகினையும் கொண்டுள்ளன.

இயற்கை வர்ணனை கட்டுரை – 1

இயற்கை என கூறப்படுவது யாதெனில் மனிதனுடைய தலையீடு ஏதும் இன்றி இறைவனின் படைப்பால் தானாகவே உருவாகிய அனைத்தும் இயற்கை எனப்படும். இவ்வாறான இயற்கையினை வர்ணிப்பது என்பது அளவு கடந்த ஒரு விடயமாகும்.

கண் காணும் இடம் எல்லாம் பரந்து காணப்படும் வானம், பூமியில் பெரும்பகுதியை சூழ்ந்துள்ள சமுத்திரங்கள், கண் குளிரச் செய்யும் வனப்பு மிகுந்த இயற்கை காடுகள், அதனுள் வாழும் விலங்கு, பறவை, பூச்சியினங்கள் என அனைத்துமே வர்ணிக்கத் தகுந்தவாறு இயற்கை கொண்டுள்ள விடயங்கள் ஆகும்.

காலையில் உதித்து மாலையில் மறையும் சூரியன். அது கிழக்கில் காலையில் உதிக்கும் போது கீழ்வானத்தை சிவக்கச் செய்யும் அது போல மாலையில் மேற்கில் மறையும் போதும் அது சார்ந்த கடற்பரப்பை வர்ணமயமாக்கும் அழகோ தனி அழகாகும்.

இரவினை பகலாக்கும் நிலவினை எடுத்துக் கொண்டால் வளர்வதையும் தேய்வதையும் இயல்பாக கொண்டு பல வடிவங்களை மாற்றி தன் அழகை வெளிப்படுத்தக் கூடியது. பச்சை வண்ண காடுகளை எடுத்துக் கொண்டால் அவை கொண்டுள்ள அழகும் ஆச்சரியங்களும் எண்ணற்றவையாகும்.

அது மட்டுமா காட்டு விலங்குகளுக்கு வாழிடமாகவும் கடும் வெப்பத்தை தணிக்கும் குளிர் காற்றினை உருவாக்கும் தொழிற்சாலையாகவும் காடுகள் காணப்படுகின்றன.

காதோடு கவி பாடும் ஆறுகளானவை மலைகளில் உருவாகி பல இடங்களை கடந்து இறுதியாக கடலில் சங்கமமாகின்றது.

வரும் வழியில் இந்த ஆறானது ஓடை, நீர்வீழ்ச்சி என பல வடிவங்களை எடுத்து இயற்கையின் அழகையும் அதன் பிரம்மிப்புக்களையும் வெளிப்படுத்துவதாக காணப்படுகின்றது.

இயற்கை வர்ணனை கட்டுரை – 2

மனிதனை படைத்த இறைவன் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்தையும் கொண்டதாக இந்த இயற்கையை உருவாக்கி உள்ளார். இந்த இயற்கையினுள் நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்ச பூதங்கள் காணப்படுவதோடு அவை ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளையும் அழகினையும் கொண்டுள்ளன.

நிலத்தினை எடுத்துக் கொண்டால் காடுகள், மலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனங்கள், மேட்டு நிலங்கள், குன்றுகள் என பலவகையான வடிவங்களையும் அவை தனித்தனியே பல பண்புகளையும் அழகினையும் கொண்டுள்ளன.

நீரினை எடுத்துக் கொண்டால் பூமி மேலே அது கொண்டுள்ள வடிவங்களோ பல வகைப்படும். அவையாவன. கடல், ஆறு, குளம், ஏரி, நீர்வீழ்ச்சி என்பவையாகும்.

நிலத்தில் காணப்படுகின்றது போலவே நீருக்குள்ளும் பல வகையான அழகானதும் ஆச்சரியம் மிக்கதான பல உயிரினங்கள் காணப்படுகின்றன. அவையானவை நீர் தாவரங்கள், வண்ண வண்ண மீன்கள், என கூறிக்கொண்டே போகலாம்.

கடலானது கரையை தொடுகின்ற இடத்திலே உருவாகின்ற அலையானது கரையுடன் மோதும் காட்சியினை வர்ணிக்க வார்த்தைகள் போதாது.

ஆகாயத்தினை எடுத்துக் கொண்டால் உலகினை போசிக்கின்ற பகலவன் மற்றும் மழை என அனைத்தையும் உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

பகல் முழுவதும் தேவையான வெப்பத்தை சூரியன் தருவது போல இரவின் கருமையை போக்க வெள்ளி வண்ண நிலவையும் முத்துச் சிதறல் போல நட்சத்திரங்களையும் தன்னகத்தே கொண்டு சிறப்புறுகின்றது இந்த ஆகாயம்.

இவை மட்டுமா? மழை, பனி, முகில் என பல விடயங்களோடு கண்ணை கவரும் வண்ணங்களை உடைய வானவில்லையும் எமக்கு காட்டுவதாக ஆகாயம் அமைந்துள்ளது.

You May Also Like:
கடற்கரை காட்சி சிறுவர் கட்டுரை
இயற்கை அழகு கட்டுரை