கடற்கரை காட்சி சிறுவர் கட்டுரை

Kadarkarai Katchigal Katturai In Tamil

இந்த பதிவில் “கடற்கரை காட்சி சிறுவர் கட்டுரை” என்ற தலைப்பில் இரண்டு (02) கட்டுரைகளை காணலாம்.

ஒவ்வொரு கட்டுரைகளும் 150 சொற்களை உள்ளடக்கியுள்ளது. இக்கட்டுரை சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கடற்கரை காட்சி சிறுவர் கட்டுரை – 1

அன்று ஒரு விடுமுறை நாள் என்பதால் என் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக பொழுதினை கழிப்பதற்கு தீர்மானித்து கடற்கரை நோக்கி பயணம் செய்தோம்.

மாலை வேளையில் கடற்கரைக்கு சென்ற போது எங்களைப் போலவே பலர் கடற்கரையினுடைய அழகை கண்டு ரசிப்பதற்கு வந்திருந்தனர். சூரியன் தன் கடமையை சரிவர செய்து விட்டு ஓய்வெடுக்க வானத்தின் அடிவாரத்தில் நுழைந்து கொண்டிருந்தான்.

அவ்வேளையில் சூரியன் செக்கச் சிவப்பாக இருந்ததுடன் தனது ஒளியை கடல் அலைகளின் மேல் விழ வைத்து கடல் நீரிலும் தன் நிறத்தை பிரதிபலிக்க செய்தது. அவ்வேளையில் அந்த பெரிய சூரியனுக்கு இடையில் சில பறவைகள் பறந்து சென்றன.

அதைப் பார்த்தவுடன் எங்கள் வீட்டு சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் கடற்கரை காட்சி படம் ஒன்றின் நினைவு என் மனதில் ஒரு கணம் வந்து சென்றது. என்னைப் போல பல சிறிய பிள்ளைகள் கடற்கரை மணலில் வீடு கட்டி விளையாடினர்.

இன்னும் சிலர் இங்கும் அங்குமாக ஓடி ஆடி திரிந்தனர். இன்னும் சிலர் கடல் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர். வேறு சிலர் கடற்கரை ஓரத்தில் பட்டங்களை பறக்க விட்டு விளையாடினர். அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கடல் நீரில் குளித்துக் கொண்டிருந்தனர்.

கரையோரங்களில் மணலில் இருந்த பொந்துகளில் இருந்து சிறிய சிறிய நண்டுகள் வருவதும் போவதுமாக இருந்தன.

கரையில் வந்து மோதுகின்ற அலைகளினால் உண்டாகிய வெண்மையான நுரைகள் பார்ப்பதற்கு மிக அழகாக இருந்தன. சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பித்த போது நாங்கள் வீடு நோக்கி மீள புறப்பட தயாராகினோம்.

கடற்கரை காட்சி கட்டுரை – 2

காலைப் பொழுதில் உடற்பயிற்சிகாக ஓடுவது எனது அப்பாவின் வழக்கம். சில நாட்களில் நானும் அவருடன் செல்வதுண்டு. அவ்வாறு ஒரு நாள் செல்கின்ற போது கடற்கரையோரமாக சென்றிருந்தோம்.

நான் கடற்கரைக்கு ஏற்கனவே சென்றிருந்தாலும் கூட காலை வேளையில் ஒரு போதும் சென்றதில்லை. காலைப் பொழுதில் கடற்கரையில் மீனவர்கள் அனைவரும் கடலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தனர்.

அதற்காக தங்கள் படகுகளை கடலினுள் தள்ளிக் கொண்டிருந்தனர். அவ்வாறு படகுகளை அவ்வாறு தள்ளுகின்ற போது அவர்கள் அனைவரும் ஒன்றாக பாடல் பாடுவதை கேட்க கூடியதாக இருந்தது.

கடலானது ஆர்ப்பரிக்கும் அலைகள் இன்றி மிக அமைதியாக சாந்த சொரூபமாக காட்சியளித்தது. கரையோரங்களில் இருக்கும் தென்னை மரங்களில் இருந்த பறவைகளின் ஒலிகளை கேட்க கூடியதாக இருந்தது.

அமைதியான கடல் மேற்பரப்பில் சில பறவைகள் அங்குமிங்குமாக பறப்பதும் நீருக்குள் முங்கி எழுவதுமாக இருந்தன. சில பெண்கள் கடலுக்கு சென்று திரும்பி வருபவர்களுக்காக கரையில் உணவுக் கூடையை வைத்துக் கொண்டு காத்திருந்தனர்.

நான் எனது அப்பாவிடம் அனுமதி பெற்று கடலில் கால் நனைக்க சென்றேன். கடல் நீர் வழக்கம் போல் இல்லாது மிக குளிர்மையாக இருந்ததுடன் புத்துணர்ச்சியையும் அளித்தது.

கதிரவனின வெளிச்சம் அதிகரிக்க அதிகரிக்க கடற்கரையில் ஆள் நடமாட்டம் அதிகரித்ததோடு பரபரப்பாகவும் மாறியது.

அப்பாவிடம் எனது ஆசையை கூறி சிறிது நேரம் கடற்கரையிலே அமர்ந்து நானும் அப்பாவும் அங்கு நடப்பவற்றையும் கடற்கரையின் அழகினையும் கண்டு களித்தோம்.

You May Also Like:
இயற்கை அழகு கட்டுரை
என் வாழ்வின் லட்சியம் கட்டுரை