நவராத்திரி பற்றிய கட்டுரை

Navarathri Katturai In Tamil

இந்த பதிவில் பண்டிகையாக கொண்டாடும் “நவராத்திரி பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

இந்த விரதமானது மனதுக்கு நிம்மதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும் விரதமாக இருக்கின்றது. நவராத்திரி விரதமானது இந்துக்களால் பண்டிகை போன்று கொண்டாடப்படுகின்றது.

நவராத்திரி பற்றிய கட்டுரை

குறிப்புச் சட்டகம்

  1. முன்னுரை
  2. நவராத்திரி விரதம் உருவான கதை
  3. தத்துவங்கள்
  4. விரதம் இருக்கும் முறைகள்
  5. விரதத்தின் நன்மைகள்
  6. முடிவுரை

முன்னுரை

இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றாக நவராத்திரி விரதம் காணப்படுகின்றது. இவ் விரதமானது இந்துக்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.

நவராத்திரியின் பொருள் என்பது நவ+ராத்திரி என்பன சேர்ந்து உருவானது. அதாவது ஒன்பது இரவுகள் என பொருள் கொள்ளப்படுகின்றது. இக்கட்டுரையில் நவராத்திரி விரதம் பற்றிக் காண்போம்.

நவராத்திரி உருவான கதை

கம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

இவன் பிரம்மனை நினைத்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது என்றும் அப்படி நேர்ந்தால் அது பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

இதனால் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். தேவர்களை காக்க சக்தி பெண்ணுருவம் பூண்டு பூமியில் பிறந்தார். தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.

இதை கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

தத்துவங்கள்

இந்துக்களின் சிறப்பு விரதங்களில் ஒன்றான நவராத்திரி சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணர்த்துகின்றது. தீமைகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விரதமாகும்.

கொலு வைக்கும் நிகழ்வானது அனைத்து இடங்களிலும் சக்தி நிறைந்துள்ளார் என்பதை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

மகிசாசுரன் என்ற அரக்கனை அழித்து உலகத்திற்கு நன்மையை அருளிய சக்தி கஷ்டங்கள், துன்பங்கள், நோய்கள் அனைத்தையும் இல்லாது ஒழிப்பார் என்ற நம்பிக்கையில் வழிபாடு இடம்பெறும்.

நவராத்திரி விரதம் இருக்கும் முறை

நவராத்திரி ஆரம்பிக்கக் கூடிய முதல் தினம் தொடக்கம் ஒன்பது நாள் முழுவதும் காலையில் நீராடி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்குப் பூச்சூடி, கற்பூரம், பழம் இதனுடன் நெய்வேத்தியம் வைத்து தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்க வேண்டும்.

ஒன்பது நாள் விரதங்களில் தலைமுடி, நகம் போன்றவற்றை வெட்டுவதைத் தவிர்த்தல் வேண்டும். வீட்டைச் சுத்தமா வைத்து புலால் உணவுகளைத் தவிர்த்து மனதில் புனிதத்துடன் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

நவராத்திரி விரதத்தின் நன்மைகள்

வறுமை நீங்கும், வாழ்க்கையில் வறுமையை நீக்கி செல்வச் செழிப்பினை வழங்கக்கூடிய விரதமாகும்.

கடன் தொல்லை தீரும் பிறவிக்கடன் மற்றும் பிறரிடம் வாங்கிய கடன் தொல்லைகள் தீரும், பகை தீரும், நமக்கு வெற்றி கிடைக்கும், பக்தி அதிகரிக்கும், மகிழ்ச்சி, மன நிம்மதி கிடைக்கும்.

முடிவுரை

நவராத்திரி விரதமானது சிறப்புமிக்க ஒன்பது நாள் விரதம். மக்கள் மனதில் மகிழ்ச்சியையும் பக்தி உணர்வினையும் விதைப்பதாக இருக்கின்றது.

விரதத்தின் மகிமையைத் தெரிந்துகொண்டு சிறுவர்களும் பக்தியுடன் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

பண்டிகையாக கொண்டாடும் விரதமான நவராத்திரி விரதம் இந்துக்களின் புனித, சிறப்பு மிக்க நன்மை தரும் விரதம் ஆகும். இதனை இந்துக்களான நாம் அனைவரும் உணர்ந்து அனுஷ்டித்து நன்மை பெறுவோம்.

You May Also Like:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் கட்டுரை